×

இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெறும் வகையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், TNSDC உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் துணை முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெருக்கவும், வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு திறன் மற்றும் மொழிப் பயிற்சி வழங்கவும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) இடையே இன்று (3.3.2026) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தமிழ்நாட்டின், வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளித்து வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெருக்கவும், வெளிநாடு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு உகந்த வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை கண்டறிந்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திதரவும், வெளிநாடு சென்று உயர் கல்வி பயில விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான ஆவணங்களில் மத்திய அரசின் சான்றொப்பம் (Attestation) இடைத்தரகர்கள் இன்றி, சிரமமின்றி பெற வகை செய்யும் நோக்கங்களுக்காக துணை முதலமைச்சர் முன்னிலையில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் (ஆட்டோ மொபைல்), தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் (தளவாடங்கள்), தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் (சுகாதார நலன்) மற்றும் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை, ஆர்.எம். கே. குழும கல்வி நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கி. பாலசுப்ரமணியம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் பாடி, தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மூத்த துணைத் தலைவர் வி.என். சிவசங்கர், தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மைய (ஆட்டோ மொபைல்) நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பஞ்சாட்சரம், தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மைய (தளவாடங்கள்) நிர்வாக இயக்குநர் பனா பிஹாரிநாயக், தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மைய (சுகாதார நலன்) நிர்வாக இயக்குநர் லெனின் பயஸ், ஆர்.எம்.கே. குழும கல்லூரி முதல்வர் டாக்டர் கே. கே. சிவஞான பிரபு உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Foreign Employment Agency ,TNSDC ,Chennai ,Tamil Nadu ,Deputy ,Chief Minister ,Adyanidhi Stalin ,Tamil Nadu Skills Development Corporation ,
× RELATED விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக்...