- என்டிஏ கூட்டணி
- பியூஷ் கோயல்
- சென்னை
- ஆதிமுக கூட்டணி
- தமிழ்
- ஜஹா மலிதா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பியுஷ் கோயல்
- தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கும் வகையில், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் வரும் 26ம்தேதி சென்னை வருகை தர உள்ளார். அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
குறிப்பாக, ஓராண்டுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நிலையில் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு, பாஜக அதிக தொகுதிகளை கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. 50 முதல் 60 தொகுதிகள் வரை கேட்பதாக வரும் தகவல்கள் அதிமுகவினர் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கூட்டணி அமைத்து நீண்ட நாட்களாக எந்த கட்சிகளும் சேராத நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் சில நாட்கள் முகாமிட்டு கூட்டணி தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தினார். இதை தொடர்ந்து பாமக மற்றும் அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. ஆனால் அதற்கு பிறகு முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையவில்லை.
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் வரும் 26ம்தேதி தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கவே ஒன்றிய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது சென்னை அமைந்தகரையில் தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் பியூஷ் கோயல் பங்கேற்கிறார். எனவே, அவரது வருகையின் போது, அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை இறுதி வடிவம் பெறும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி முக்கிய தலைவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. எனவே பியூஷ் கோயல் வருகை என்பது பாஜக, அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

