லக்னோ: உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் அகிலேஷ் யாதவின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு நான்கு நாள் பயணமாக நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி லக்னோவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரை மறைமுகமாக குறிப்பிட்டு, ‘100 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி பக்கம் வந்தால் அவர்களை முதல்வராக்க சமாஜ்வாதி கட்சி ஆதரவு தரும்’ என்று அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிநாடு சென்றுள்ளதால் தலைமை மாற்றத்திற்கு இதுவே சரியான வாய்ப்பாகும். நூறு எம்எல்ஏக்களை அழைத்து வரும் பாஜக தலைவருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிக்கும். இந்த சலுகை 1 வாரம் வரை மட்டுமே அமலில் இருக்கும்’ என்றார். தற்போது சமாஜ்வாதி கட்சியிடம் 111 இடங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 100 எம்எல்ஏக்கள் இணைந்தால் 202 இடங்களுடன் பெரும்பான்மையை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜக தரப்போ அகிலேஷின் கருத்தானது அரசியல் விரக்தியின் வெளிப்பாடு என்று இந்த கருத்தை நிராகரித்துள்ளது.
