×

தெருவோரத்தில் இருந்து குரைக்கும் பிராணி போல் எடப்பாடி கத்துகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடும் தாக்கு

பெரம்பூர்: சட்டமன்ற உறுப்பினராககூட முடியாதோ என்ற விரக்தியில் தெருவோரத்தில் இருந்து குரைக்கும் ஒரு பிராணி போல எடப்பாடி பழனிசாமி கத்திக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடுமையாக தாக்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த ஓராண்டாக ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி துர்கா ஸ்டாலினால் கொளத்தூரில் துவங்கப்பட்ட ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சி இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து திருவிக. நகர் சந்திரயோகி சமாதி சாலையில், ‘’பசீ தீர்க்கும் எண்ணம், பரிந்தூட்டும் உள்ளம்’’ என்ற தலைப்பில் 365 வது நாளாக நடைபெற்ற ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 1200 பேர் என ஓராண்டாக 4 லட்சத்திற்கும் அதிகமான ஏழை, எளிய பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில், 365வது நாள் அமுத கரங்கள் நிகழ்ச்சிக்கு உழைத்த நிர்வாகிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் இன்று காலை நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துர்கா ஸ்டாலின், நிர்வாகிகள் 145 பேருக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம் மூலம் மக்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி இந்தாண்டும் மார்ச் 1ம் தேதி முதல் அமுதக் கரங்கள் போன்று ஒரு திட்டம் தொடங்கப்பட உள்ளது.வடசென்னையில் பலர் பசியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதே? தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. விஜய் பெரம்பூரில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறதே? தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறாரே? பதவி வெறி பிடித்துப்போய் சட்டமன்ற உறுப்பினராககூட சட்டமன்றம் உள்ளே நுழைவோமா என்ற பயத்தில் தெருவோரத்தில் இருந்து குரைக்கும் ஒரு பிராணி போல் எடப்பாடி பழனிசாமி கத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Edappadi ,Minister ,P.K. Sekarbabu ,Perambur ,Edappadi Palaniswami ,MLA ,Chief Minister ,M.K. Stalin ,Chennai East District DMK ,
× RELATED மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க...