ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சாலையில் நடந்து சென்ற அப்பாவி மக்கள் சிலரும் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெக்கர்ஸ் டால் என்ற இடத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் இரண்டு வாகனங்களில் சுமார் 12 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.
அவர்கள் மதுக்கடையிலிருந்தவர்கள் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து இருந்து தப்பிச் செல்லும்போதும், சாலையில் சென்ற பொதுமக்களையும் குறிவைத்து அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். ‘தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் நாட்டில் நடைபெறும் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இது’ என காவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக மதுக்கடைகளைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
