திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 03:30 முதல் 04:30 மணி அளவில் இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (03.02.2023) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (03.02.2023) விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.