மேட்டூர்: மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் அத்துமீறி நுழைந்த கர்நாடக வனத்துறையினர், மீனவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்துச் சென்றதோடு, 2 பேரை சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இருமாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில், தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர், மீன்வளத்துறையில் முறைப்படி உரிமம் பெற்று, மீன் பிடித்து வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில், ஏராளமான மீனவர்கள் 85 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம் அமைத்து மீன் பிடித்து வருகின்றனர். தமிழக வன எல்லையில், மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீனவர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.