இரண்டு தங்கைகள் மற்றும் மனைவியுடன் ஒரு பங்களாவில் வசித்து வருகிறார், பிரஜின். இளைய தங்கை சர்மிஷாவை தனது சொந்தக்காரர் கணேஷ் சாவரட்டிலுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால், குடித்துவிட்டு ரவுடித்தனம் செய்வது மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதுதான் கணேஷ் சாவரட்டிலுக்கு வேலை. இதனால் ஜெயிலுக்கு சென்ற அவர், தண்டனை முடிந்து திரும்பி வருகிறார். வேறொருவரை காதலிக்கும் சர்மிஷா, கணேஷ் சாவரட்டிலை கொல்ல காதலனுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அது நடந்ததா? அவரது காதல் ஜெயித்ததா? பிரஜின் என்ன ஆனார் என்பது மீதி கதை.
பாசத்தை பொழியும் அண்ணனாகவும், நேசம் கொண்ட கணவராகவும் பிரஜின் யதார்த்தமாக நடித்துள்ளார். காதலை விட்டுக்கொடுக்க மறுத்து, ஒரே அறைக்குள் சர்மிஷா நடத்தும் போராட்டம் அனுதாபம் அள்ளுகிறது. வில்லனாக கணேஷ் சாவரட்டில் சிறப்பாக நடித்துள்ளார். நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். ஒரே இரவில், ஒரே பங்களாவில் படமாக்கப்பட்ட சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கேற்ற ஒளிப்பதிவை சுரேஷ் குமார் சுந்தரம் வழங்கியுள்ளார். பின்னணி இசையில் வி.ஜி.ஹரி கிருஷ்ணன் மிரட்டியுள்ளார். ராம் பிரபா எழுதி இயக்கி இருக்கிறார். படம் முழுக்க ஒரே பாணியில் நகர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. முகமூடி மனிதன் தோன்றும் காட்சிகள் சஸ்பென்ஸ் நீடிக்க உதவுகிறது.

