புதுடெல்லி: பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய பார்வையாளரின் கருத்துக்கு சிரித்த நகைச்சுவை நடிகர் பிரணித் மோரே மன்னிப்பு கேட்டுள்ளார். டெல்லி அருகே உள்ள குருகிராம் பகுதியில் நடந்த மேடை நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர் வரிசையில் இருந்த இமான்ஷு ஜங்ரா என்பவர் தனது காதல் அனுபவம் குறித்துப் பேசினார். அப்போது அவர், ‘பெண் ஒருவருடன் வெளியே சென்றபோது சிக்கன் பிரியாணி உணவிற்காக 370 ரூபாய் செலவு செய்தேன்; அந்தப் பணத்தை ஈடுகட்ட அவரை எனது அறைக்கு அழைக்க நினைத்தேன்’ என்று பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அநாகரிகமாகப் பேசினார்.
இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய நடிகர் பிரணித் மோரே, அந்தக் கருத்தைக் கேட்டுச் சிரித்ததோடு ‘இதுதான் குருகிராமின் உச்சகட்ட கலாசாரம்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகை உர்ஃபி ஜாவேத் உள்ளிட்ட பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, பிரணித் மோரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பார்வையாளர் பேசிய கருத்துக்கு நான் சிரித்திருக்கக் கூடாது; அதனை அப்போதே தட்டிக்கேட்டிருக்க வேண்டும். அது எனது தவறான முடிவுதான். பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய கருத்துகளை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்’ என்று தெரிவித்ததுடன், அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார். இதேபோல், சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த இமான்ஷு ஜங்ராவும், ‘யாரையும் புண்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு பேசவில்லை’ என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

