சென்னை: ஒரு பாடலுக்கு இசையமைத்தபோது அழுதுவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். எந்த சூழலாக இருந்தாலும் என்ன மன நிலையில் இருந்தாலும் ஒரே மாதிரியான முகபாவம், உணர்வுடன் காணப்படுவார் ஏ.ஆர்.ரஹ்மான். லேசான புன்னகை, குறைவான வார்த்தைகள் இதுதான் அவரது இயல்பு. அவர் பொதுவெளியில் கோபப்பட்டோ, கண் கலங்கியோ யாரும் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட ரஹ்மான், ஒரு பாடலை உருவாக்கியபோது அழுதுவிட்டதாக தெரிவித்துள்ளார். முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து இப்போது அவர் பேசியிருக்கிறார். ‘‘அது ஒரு ரம்ஜான் மாதம். நான் நோன்பில் இருந்தேன். ‘மின்சார கனவு’ படத்துக்காக ஒரு முக்கியமான பாடலை உருவாக்க வேண்டும். அதற்காக எனக்கு தரப்பட்ட பாடலின் சூழல் புதுமையாக இருந்தது.
காதல் வேண்டாம் என இருக்கும் பெண்ணுக்கு வேறொருவர் மீது காதலை ஏற்படுத்த பெண்ணின் நண்பர் முயல்வார். அந்த கட்டத்தில் அந்த பெண்ணுக்கும் நண்பருக்கும் இடையே ஒருவித பிணைப்பு ஏற்படும். அதுதான் பாடல் என இயக்குனர் ராஜீவ் மேனன் சொன்னபோது, அதற்கான டியூனிக்கு பல நாள் முயற்சித்தேன். கடைசியாக ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் டியூன் உருவானதும் நான் அதை இசையாக மாற்றியபோது நான் அழுதே விட்டேன்’’ என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
