சென்னை: விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஓ… பட்டர்பிளை’. இதில் சிபி, நிவேதிதா சதீஷ், நாசர், லட்சுமிப்பிரியா சந்திரமவுலி, கீதா கைலாசம் நடித்துள்ளனர். வேதாராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்ய, வைசாத் சோமநாத் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வரும் இப்படம் குறித்து விஜய் ரங்கநாதன் கூறியதாவது: ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுக்கு இடையே இருக்கக்கூடிய விசித்திமான உறவுச் சிக்கல்களை பற்றி சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் கே.பாலசந்தர் காலத்தில் உருவான படத்தை இன்றுள்ள இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில், மிகவும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கியுள்ளேன். காட்சிகள் யதார்த்தமாகவும், வரம்பு மீறாமலும் இருக்கும். இதனால், ‘மூன்று முடிச்சு’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம்.
ஆனால், ஒரு லெஜண்ட் உருவாக்கிய அப்பெயர் அப்படியே இருக்கட்டும் என்று, ‘ஓ… பட்டர்பிளை’ என்று மாற்றினோம். கோத்தகிரி மலையில் தங்கி, ஒரு வீட்டிலேயே முழு படத்தையும் உருவாக்கினோம். டப்பிங் கிடையாது. ‘லைவ்’ சவுண்ட் முறையில் ஷூட்டிங் நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நிவேதிதா சதீஷுக்கு மிகவும் சிக்கலான ஒரு கேரக்டர். தமிழ் படத்தில் ஒரு ஹீரோயினுக்கு இப்படி கிடைப்பது அரிதிலும் அரிது. அதை உணர்ந்து அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
