கடந்த ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம், ‘நந்தன்’. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம், பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை அழுத்தமான காட்சிகளுடனும், அரசியல் வசனங்களுடனும் சொல்லியிருந்தது. இதனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், ‘நந்தன்’ படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இரா.சரவணன் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ‘முழுக்க முழுக்க ‘நந்தன்’ படத்தை பற்றி பேசினோம். ‘நந்தன் 2’ படத்தை உருவாக்க மூவரும் தயாராக இருக்கிறோம். விரைவில் நல்ல செய்தி வெளியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
