கடந்த ஆண்டு வெளியான ‘காந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பாக்யஸ்ரீ போர்ஸ். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் அவர், தெலுங்கில் கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கிங்டம்’, ராம் பொத்தினேனி ஜோடியாக ‘ஆந்திரா கிங் தாலுகா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் என்ற ஊரை சேர்ந்தவர், பாக்யஸ்ரீ போர்ஸ். இந்த ஊரின் முன்னாள் பெயர், அவுரங்காபாத். சில நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவரிடம் இருந்து அந்த பிராந்தியத்தின் வளரும் திறமையாளர் என்ற விருதை பாக்யஸ்ரீ போர்ஸ் பெற்றார். முன்னதாக அவர் இளையராஜா கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்த அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உங்களால் நான் கவுரவிக்கப்படுவது, வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தனிப்பட்ட பெருமையாகும்.
உங்கள் ஆசியுடன், உங்களுடன் இணைந்து எனது திரைப்பயணத்தை தொடர்ந்து வருவதில் நான் அதிக நன்றியுணர்வு கொள்கிறேன். இந்த அழகான கவுரவத்துக்காகவும், மராத்வாடாவின் மகளான என்னை இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்காகவும் விழா குழுவினருக்கு நன்றி. சத்ரபதி சம்பாஜி நகரை நான் இன்னும் பெருமைப்படுத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்றார்.
