தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் நயன்தாரா, தனது சக நடிகர், நடிகைகளை அடிக்கடி சந்தித்து நட்பு வளர்த்து வருகிறார். சமீபத்தில் திரிஷாவுடன் அவர் வெளியிட்டிருந்த செல்ஃபி வைரலானது. தற்போது மாதவன், அவரது மனைவி சரிதாவுடன் விக்னேஷ் சிவன், நயன்தாரா சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. மாதவன், சரிதா தம்பதி குறித்து நயன்தாரா குறிப்பிடுகையில், ‘எப்போதுமே எனது பேவரைட் தம்பதி இவர்கள்தான்.
அன்பு, நெருக்கம், நிஜமான உள்ளங்கள், நல்ல விஷயங்கள் எல்லாமே ஒன்றிணைந்தவர்கள். ஒவ்வொருமுறையும் அவர்களை நான் சந்திக்கும்போது, நாங்கள் ஏதோ பல வருடங்கள் அவர்களை நன்கு அறிந்தவர்கள் போல் உணர்கிறோம். அவர்கள் நண்பர்கள் மட்டுமல்ல, எங்கள் குடும்ப உறுப்பினர்களும் கூட’ என்று உருகியுள்ளார். துபாயில் மாதவன் சொந்த வீடு வைத்திருப்பது போல் நயன்தாராவும் சொந்த வீடு வைத்துள்ளார். மும்பையில் மாதவனுக்கு வீடு இருக்கிறது. அதுபோல் சூர்யா, ஜோதிகா தம்பதிக்கும் மும்பையில் வீடு இருப்பதால், அவர்களையும் மாதவன், சரிதா தம்பதி அடிக்கடி சந்தித்து பேசி தங்கள் நட்பை வளர்த்து வருகின்றனர்.
