பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக வாலிபர்: கிணற்றில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்

திருவனந்தபுரம்: விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவர் மீது தமிழ்நாடு, கேரளாவில் ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து சொரணூர் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் அவரை கோவிந்தசாமி ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் கைதான கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. ொடர்ந்து அவர் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை சிறையில் கோவிந்தசாமியை காணவில்லை. விசாரணையில், அவர் சிறை கம்பியை அறுத்து துணிகளை பயன்படுத்தி மின்வேலியுடன் கூடிய 12 அடி உயர சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்தது. கோவிந்தசாமியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

சிறையில் இருந்து கோவிந்தசாமி தப்பியது குறித்து சமூக வலைதளங்களிலும் டிவியிலும் படத்துடன் செய்தி வரத் தொடங்கியது. காலை 9 மணியளவில் கண்ணூர் தளாப் பகுதியில் கோவிந்தசாமியை வினோஜ் என்பவர் பார்த்துள்ளார். உடனே கோவிந்தசாமி என்று பெயர் சொல்லி வினோஜ் அழைத்ததும் ஓட்டம் பிடித்தார். இது பற்றி போலீசுக்கும் வினோஜ் தகவல் கொடுத்தார். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பாழடைந்த வீட்டின் பின்புறம் உள்ள ஒரு கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கயிற்றை கிணற்றுக்குள் வீசி அதில் ஏறி வருமாறு கூறி கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்ட கோவிந்தசாமியிடம் கண்ணூர் போலீஸ் கமிஷனர் நிதின் ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை போலீசார் கண்ணூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் இருந்து தப்பித்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். கோவிந்தசாமியை போலீசார் திருச்சூர் மத்திய சிறைக்கு மாற்ற தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கண்ணூர் சிறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக வாலிபர்: கிணற்றில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: