சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல்

*மன்னார்குடியில் 5 பேர் கும்பல் கைது

மன்னார்குடி : சிங்கப்பூரில் இருந்து திருவாரூருக்கு கடத்தி வந்த ரூ.2.50 கோடி மதிப்பிலான 2.7 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீசை விற்க முயன்ற 5 பேர் கும்பலை மன்னார்குடி வனத்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய பஸ் நிலையம் அருகே அம்பர் கிரீஸ் கட்டிகளை கடத்தி விற்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் நேற்று கிடைத்தது. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட வன அலுவலர் (பொ) கிருத்திகா உத்தரவின் பேரில் மன்னார்குடி வனசரக அலுவலர் சைதானி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வடுவூர் வடபாதி வடக்கு தெருவை சேர்ந்த சதீஷ் (40) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர், வடுவூர் வடபாதி நடுத்தெரு பாலமுருகன் (35), எளவனூர் வடக்குதெரு முருகானந்தம் (39), விவேகானந்தம் (64), முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம், அடைஞ்ச விளாகம் ஆனந்தராஜ் (39) ஆகியரோடு சேர்ந்து அம்பர் கிரீஸ் கட்டிகளை திருட்டுத்தனமாக விற்பனைக்கு சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 2.7 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.2.50 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: