ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி; பாஜ பெண் நிர்வாகி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: மதுரை ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்த பாஜ பெண் நிர்வாகி, மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உத்தமபுரம் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (43). இவரது மகன் பிஇ பட்டதாரி. கடந்த 2023ல் அம்பிகாவுக்கு ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாஜ மகளிரணி மாவட்ட செயலாளர் சின்னத்தாய் அறிமுகமானார். அப்போது இவர், அம்பிகாவின் மகனுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார். இதனை நம்பி அம்பிகா கடந்தாண்டு ஜூலை மாதம் சின்னத்தாய் மற்றும் அவரது உறவினர் பட்டை நாகராஜ் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். அதன் பிறகு ரூ.50 ஆயிரத்தை தவணை முறையில் பட்டை நாகராஜின் அக்கவுண்டுக்கு அம்பிகா அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், வேலை வாங்கித் தராமல் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர். கடந்த ஜூன் 14ம் தேதி அம்பிகா, டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சின்னத்தாய் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்ட போது சின்னத்தாய் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பிகா நேற்று முன்தினம் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சின்னத்தாய், பட்டை நாகராஜ் மற்றும் சின்னதாயின் மகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி; பாஜ பெண் நிர்வாகி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: