தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு பணி தீவிரம்

ஊட்டி, ஜூலை 20: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு மலர் செடிகள் நடவு செய்ய 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனை முதல் சீசனாக கடை பிடிக்கப்படுகிறது.

இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவைகளில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும், பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இதற்கு அடுத்தப்படியாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசன் அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் சீசன் போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள். இவர்களை மகிழ்விக்கும் வகையில், பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதில், பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கும். அதேபோல், மாடங்களில் வைக்கப்பட்டுள்ள 25 முதல் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, அவைகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வர்.

முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் சீசனுக்கான பூங்கா தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பூங்கா நர்சரிகளில் மலர் நாற்று உற்பத்தி நடந்து வருகிறது. மேலும், இவைகளை நடவு செய்ய தற்போது பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த தொட்டிகளில் நாற்று நடவுகள் செய்யப்படவுள்ளன.

இம்முறை மேரிகோல்டு, டேலியா, சால்வியா, பிகோனியா, சைக்ேளாமென், டெய்சி உள்ளிட்ட பல்வேறு மலர் நாற்றுக்கள் இந்த தொட்டிகளில் நடவு செய்யப்படவுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: