கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 18: கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பெண்ணிடம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி சாந்தி(45). சம்பவத்தன்று இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைத்திருந்த அரைபவுன் நகையை மீட்டு கொண்டு கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்துள்ளார்.

ரூ.37ஆயிரம் பணத்துடன் அரை பவுன் நகையையும் சேர்த்து சாந்தி தனது கைப்பையில் வைத்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல பஸ்நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். பேருந்து வந்ததும் அதில் ஏறிய பின்னர் டிக்கெட் எடுக்க முயன்றபோது தனது கைப்பையில் இருந்த நகை, பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தி கூச்சலிட்டார். சாந்தியை நோட்டமிட்டு யாரோ மர்ம ஆசாமி நகை, பணத்தை திருடி சென்றுள்ளான்.

இதனிடையே காணாமல் போன நகை மற்றும் பணத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி போலீசில் சாந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: