பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் எம்டிஎம்ஏ கடத்திய மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது

திருவனந்தபுரம்: பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்காக கேரள, கர்நாடகா எல்லையில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பெங்களூரூவில் இருந்து கண்ணூர் வரும் ஒரு காரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கண்ணூர் கூட்டுபுழா போலீசுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் கூட்டுபுழா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, 18 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து காரில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் ஒருவர் கண்ணூர் வளபட்டணம் பகுதியைச் சேர்ந்த ஷமீர் (24) என்றும், இன்னொருவர் அவரது நண்பர் என்பதும் தெரியவந்தது. டிஒய்எப்ஐ தலைவரான ஷமீர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வளபட்டணம் கமிட்டி உறுப்பினராக உள்ளார். இதையடுத்து விசாரணைக்குப் பிறகு 2 பேரையும் போலீசார் கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஷமீர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

The post பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் எம்டிஎம்ஏ கடத்திய மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: