திருமண புரோக்கர்கள் ரூ.3.5 லட்சம் நூதன மோசடி ரூ.50 ஆயிரத்துக்கு மணப்பெண்ணாக நடித்த 2 குழந்தைகளின் தாய்: விஜயவாடா போலீசார் விசாரணை

திருமலை: கர்நாடகா மாநிலம், கொப்பள் மாவட்டம், கங்காவதியைச் சேர்ந்த 34 வயதுடைய வாலிபருக்கு திருமணமாகவில்லை. இதற்காக ஆந்திராவில் உள்ள தரகர்கள் மூலம் பெண் பார்க்க தொடங்கினர். அதனடிப்படையில் விஜயவாடாவைச் சேர்ந்த பல்லவி என்பவருடன் கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது, புரோக்கர்கள் மணமகன் வீட்டாரிடம் ரூ. 3.5 லட்சம் வாங்கியுள்ளனர். அதன் பிறகு பல்லவி தனது கணவருடன் வாழ மறுத்ததால், மணமகனின் குடும்பத்தினரிடையே சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பல்லவியிடம் விசாரித்த போது, தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் இருப்பதாக கூறினார்.

மேலும், கணவர் தன்னை விட்டுச் சென்ற பிறகு தனது குழந்தைகள் தனியாக வசித்து வருவதாகவும், 5 நாட்களுக்கு மணமகள் போல் நடித்தால் ரூ.50 ஆயிரம் தருவதாக புரோக்கர்கள் கூறிய வார்த்தைகளை நம்பி இவ்வாறு செய்ததாக பல்லவி கூறினார். மேலும் தனது பெயர் பல்லவி அல்ல, அமானி எனவும், ரூ.50 ஆயிரம் தருவதாக கூறிய புரோக்கர்கள் ரூ.35 ஆயிரம் மட்டுமே கொடுத்தார்கள் என கூறினார். இதுகுறித்து விஜயவாடா கிருஷ்ணா லங்கா போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

The post திருமண புரோக்கர்கள் ரூ.3.5 லட்சம் நூதன மோசடி ரூ.50 ஆயிரத்துக்கு மணப்பெண்ணாக நடித்த 2 குழந்தைகளின் தாய்: விஜயவாடா போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: