அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் ஜூன் 25ம் தேதி தீர்ப்பு : பாமகவினர் மத்தியில் பரபரப்பு

திண்டிவனம் : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 2010ல் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை தாக்கி கொல்ல முயற்சி செய்தது. காருக்கு அடியில் புகுந்து அவர் உயிர் தப்பினார். ஆனால் அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார்.

இக்கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவை சேர்ந்த 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2011ல் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, 21.11.2014ல் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் பாமகவினர் 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 5 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

2025 ஏப்ரல் 28ம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஜூன் 12ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக், தீர்ப்பு தேதியை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு தரப்பட இருந்த நிலையில் ஜூன் 25க்கு தீர்ப்பை ஒத்திவைத்தது திண்டிவனம் நீதிமன்றம். பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்ற வழக்கில் வருகிற 25ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பாமகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் ஜூன் 25ம் தேதி தீர்ப்பு : பாமகவினர் மத்தியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: