அண்ணா பல்கலை. வளாக நேர்காணல் ஜப்பான் நிறுவனங்களில் 72 மாணவர்களுக்கு வேலை: ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளை முடித்த மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற 246 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஜூலை முதல் வாரம் வரை இந்த வளாக நேர்காணல் நடைபெற உள்ளது.

மேலும், இந்த வருடம் முதல் முறையாக ஜப்பான் நாட்டில் இருந்து கார்களுக்கான என்ஜின்கள் தயாரிக்கும் கோகநெய் செய்கி (Koganei Seiki) என்ற மிகப்பெரிய நிறுவனமும் வளாக நேர்காணலில் கலந்துகொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும். சர்வதேச வேலைவாய்ப்புகளில் 2 பிரபலமான ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து 72 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை பெற்று, அண்ணா பல்கலைக்கழகம் பெரிய சாதனை படைத்துள்ளது.

அதன்படி, இந்த வளாக நேர்காணலில் முதன்முறையாக ஜப்பான் நாட்டில் இருந்து கார்களுக்கான என்ஜின்கள் தயாரிக்கும் கோகநேய் செய்கி (Koganei Seiki) மற்றும் தேர்ட்வேவ் கார்ப்பரேஷன் (Thirdwave Corporation) ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளை நடத்தியது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 72 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு மொத்தம் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

விண்ணப்ப மதிப்பாய்வு, எழுத்துத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்ப நேர்காணல்கள் உள்பட பல கடுமையான தேர்வுகளை கடந்து இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 29ம் தேதி கோகநேய் செய்கியின் தொழிற்சாலை தலைவர் மற்றும் அவரது குழுவினர் ஆன்லைன் சந்திப்பில் பங்கேற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் உரையாடினர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு மையம் இயக்குனர் மற்றும் துணை இயக்குநர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் முன்னிலையில் வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.

* 1249 பேருக்கு வேலைவாய்ப்பு
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் இதுவரையில் இளநிலை படிப்புகளை முடித்த மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் சார்ந்த பிரிவுகளில் 464 பேரும், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், தயாரிப்பு தொழில்நுட்பம், தொழிற்சாலை இன்ஜினியரிங், உயிர்மருத்துவம் இன்ஜினியரிங் போன்ற முக்கிய பிரிவுகளில் 357 பேரும், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங்,

செராமிக் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், பெட்ரோலியம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம், ஜவுளி தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் 104 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதுநிலை மாணவர்களையும் சேர்த்து 1249 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூலை மாதம் வரை இந்த வளாக வேலைவாய்ப்புக்காண நேர்க்காணல் நடைபெற உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு மையம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணா பல்கலை. வளாக நேர்காணல் ஜப்பான் நிறுவனங்களில் 72 மாணவர்களுக்கு வேலை: ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளம் appeared first on Dinakaran.

Related Stories: