பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில், 16,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டு, 2,130 கி.மீ. முக்கியச் சாலைகள் நான்குவழி மற்றும் இருவழித்தட சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு, 5,000 கி.மீ.க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மாவட்ட பிற சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 1500-க்கும் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை திறந்து வைத்தல்
சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு, நில எடுப்பு, குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு உட்பட 424 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில், நாமக்கல் மாவட்டத்தில், 11.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலை மற்றும் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலையில், பள்ளிப்பாளையம் நகரின் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ அமைக்கப்பட்டுள்ள இருவழித்தட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர்கள் விரைவாக சென்று வரவும், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையிலும், இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பிற பகுதிகளுக்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும் இச்சாலையானது வழிவகுக்கிறது. இத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணியும் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
மதுரை மாவட்டம் – பழங்காநத்தத்தில் இரயில்வே கடவிற்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்
மதுரை மாவட்டத்தில் மதுரை – கன்னியாகுமரி சாலையில் பழங்காநத்தத்தில், மதுரை சந்திப்பு மற்றும் திருப்பரங்குன்றம் இரயில்வே நிலையங்களுக்கிடையே இரயில்வே கடவு எண் 366-க்கு மாற்றாக 68 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் 730 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மதுரை மாநகரின் மேற்கு பகுதிகளான பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் மற்றும் காளவாசல் பகுதிகளை மதுரை மாநகரின் கிழக்கு பகுதிகளான டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்துபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலையம் ஆகிய பகுதிகளை இப்பாலம் இணைப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், இரயில்வே கடவில் காத்திருக்காமல், காலதாமதமின்றி பயணிக்க இயலும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பழங்குடியினரின் மறுகுடியமர்வுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்தல்
இராணிப்பேட்டை மாவட்டம், மேல்பாக்கம் கிராமத்தில் அரக்கோணம் புறவழிச்சாலை அமைக்கும் நேர்பாட்டில் நிலஎடுப்பில் பாதிக்கப்பட்ட 41 இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு மறுகுடியமர்வு மற்றும் மேம்பாட்டிற்காக 6 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்து, பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். இந்த மறுகுடியமர்வு திட்டத்தில் 41 குடியிருப்புகள், அங்கன்வாடி மையம், சமுதாயகூடம், கோவில், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், குடிநீர் மற்றும் மின்சாரம் வசதி போன்ற அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுகாதாரமான சூழல், சமூக நிலைத்தன்மை மற்றும் சீரான வாழக்கை முறையை அம்மக்கள் அடைவர்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மரு.ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமை பொறியாளர் ப.செந்தில் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post இராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.