கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரி மது விலக்கு அமல்பிரிவு போலீசார், வரமலைகுண்டா பகுதியில் சோதனை செய்தனர். அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது, 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பாப்போதான்(50) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் அருகே கப்பக்கல் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது, அந்த வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரபீந்திரநாத்(25), பீகாரைச் சேர்ந்த சர்வன்குமார்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் மத்திகிரி அருகே கப்பக்கல்லில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பர்கூர் அருகே சின்ன பர்கூர், மல்லப்பாடி பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த முகமதுஆதில்(20) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

The post கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: