தைலாபுரத்தில் சமூக ஊடக பேரவை நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை: வழக்கம்போல் அன்புமணி புறக்கணிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று சமூக ஊடக பேரவை நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். வழக்கம்போல் இந்த கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்தார். பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாடு முடிந்தவுடன் தனது பலத்தை கட்சியினருக்கு நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாவட்ட செயலாளர், மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பிசுபிசுத்த நிலையில், வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் ராமதாசுக்கு கைகொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதரவும் அதிகளவில் கிடைத்ததால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார். ராமதாஸ் நடத்திய எந்த கூட்டத்திலும் செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கடந்த 25ம் தேதி பாமகவின் சமூக முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும், 26ம் தேதி பாட்டாளி தொழிற்சங்க கூட்டமும் திண்டிவனத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் அன்புமணி புறக்கணித்தார். இந்நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சமூக ஊடக பேரவை தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் 50 பேர் கலந்துகொண்டனர். இதில் சமூக வலைதளங்களில் பாமகவின் வளர்ச்சி திட்டங்கள், 108 ஆம்புலன்ஸ் திட்டம் சம்பந்தமாக பொதுமக்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி செய்த சாதனை திட்டங்களை எடுத்து கூறுவது, எதிர்க்கட்சிகள் மூலம் வரும் கருத்துக்களை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கம் போல் இந்த கூட்டத்துக்கும் வராமல் அன்புமணி புறக்கணித்தார்.

The post தைலாபுரத்தில் சமூக ஊடக பேரவை நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை: வழக்கம்போல் அன்புமணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: