திருப்பூர்: கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூரில் நிறைவடைகிறது. திருப்பூர் மாநகரில் சுமார் 13 கி.மீட்டர் நொய்யல் ஆறு பாய்கிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக திருப்பூர் மாநகரின் வழியே பாயும் நொய்யல் ஆற்றிலும் வழக்கத்தைவிட தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்ததால், திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து நொய்யல் ஆற்றில் அதிகரித்து வரும் தண்ணீரின் அளவு குறித்து பொதுப்பணி துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்குமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது appeared first on Dinakaran.