கோவை: அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘யானைகள் தொந்தரவு அதிகமாக இருகின்றது, யானைகள் வராமல் தடுக்க தடுப்புவேலி அமைக்க வேண்டும்.
சிறுவாணி தண்ணீரை கேரள அரசு அடிக்கடி திறந்து விடுகிறது. இதை தடுக்கவில்லை’’ என்றார். அதிமுகவில் இந்த முறை யாருக்கு எம்.பி. பதவி கிடைக்கும்? தம்பித்துரைக்கு பதவி தருவீர்களா?, இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டபோது அதிர்ச்சியடைந்த எஸ்பி வேலுமணி, சிரித்தபடி பதில் தர மறுத்து சென்றுவிட்டார்.
மாஜி அமைச்சர் புறக்கணிப்பு: சமீபத்தில் அதிமுகவில் அமைப்பு செயலாளர் பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இதேபோல் எஸ்.பி. வேலுமணியின் வலது கரமாக இருந்த மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர், கட்சியில் சிலரின் செயல்பாடு சரியில்லை என குறை கூறி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரைப்போல் மேலும் பலர் அதிமுகவில் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டி வருவதால் முக்கிய நிர்வாகிகள் வேலுமணியுடன் இணையாமல் இருப்பதாக தெரிகிறது.
The post அதிமுகவில் எம்.பி. பதவி யாருக்கு? பதில் தர மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறுப்பு appeared first on Dinakaran.