ஆன்லைனில் முன்பதிவு செய்து இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர் தென்னந்தோப்பில் நடந்த இரவு விருந்தில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம்: போதை பொருட்கள் சப்ளை செய்த 3 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே பேரிகை பக்கம் உள்ள தென்னந்தோப்பில் நடந்த இரவு போதை விருந்து நடன நிகழ்ச்சியில் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள், வாலிபர்கள் குத்தாட்டம் போட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இரவு விருந்துக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக -கர்நாடக எல்லையான கக்கனூர் சோதனைச்சாவடியில் கடந்த 24ம் தேதி இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்குள் நுழைந்த காரை நிறுத்தினர். ஆனால், அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து, போலீசார் காரை துரத்திச் சென்றனர். அப்போது, அந்த கார் பேரிகை அருகே முதுகுருக்கி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்தது.

போலீசார் பின்தொடர்ந்து சென்று அங்கு பார்த்தபோது, டிஜே சவுண்டுடன் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் அரை நிர்வாண ஆடைகளுடன் போதையில் நடனமாடிக்கொண்டிருந்தனர். போலீசார் வந்ததை கூட அறியாமல் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பிடித்து விசாரித்தனர். பின்னர், எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு நடத்திய சோதனையில் போதை மத்திரைகள், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காரில் தப்பி வந்த பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி (36), பீகாரைச் சேர்ந்த ரஜினீஸ்குமார் (42), கோவாவைச் சேர்ந்த இக்னேஸஸ் லாரன்ஸ் காமி லோ (47) ஆகிய 3 பேரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, அப்பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தென்னந்தோப்பை பெங்களூரு கோரமங்கலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு குத்தகை எடுத்து, இக்னேஸஸ் லாரன்ஸ் காமி லோவுடன் சேர்ந்து பண்ணை வீடு அமைத்து இரவு விருந்து நடத்தி வந்தது தெரிய வந்தது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு இரவு மதுபோதை விருந்துடன் நடன நிகழ்சிகள் நடத்தப்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போதை பொருட்கள் சப்ளை செய்ததாக பாலாஜி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

The post ஆன்லைனில் முன்பதிவு செய்து இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர் தென்னந்தோப்பில் நடந்த இரவு விருந்தில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம்: போதை பொருட்கள் சப்ளை செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: