நாகை கருவூலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: கள்ளக்காதலன் இறந்ததால் விபரீத முடிவு?

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கீழயிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகையன். இவரது மகள் அபிநயா (29). இவர் 2023ல் காவலர் பணியில் சேர்ந்தார். பின்னர், நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியில் இருந்தார். இதற்காக நாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (24ம் தேதி) நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலகத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்தார். இவருடன் சினேகா என்ற காவலரும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

நேற்று (25ம் தேதி) காலை துப்பாக்கியுடன் அபிநயா காணாமல் போகவே அதிர்ச்சி அடைந்த சினேகா ஆயுதப்படை பிரிவு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் வந்து சோதனையிட்டனர். அப்போது மாவட்ட கருவூலக அலுவலகம் எதிரே இருந்த அறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்து பூட்டை உடைத்து பார்த்தனர். அங்கு அபிநயா இருக்கையில் அமர்ந்தபடி தான் வைத்திருந்த (ஐஎன்எஸ்ஏஎஸ் 5.56 எம்எம்) துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து எஸ்பி அருண்கபிலன் நேரில் விசாரணை நடத்தினார். அபிநயாவுடன் இருந்த மற்றொரு பெண் காவலர் சினேகாவிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். அபிநயா வைத்திருந்த துப்பாக்கி, தோட்டா மற்றும் கைரேகைகள் ஆகியவை சேகரிக்கப்பட்டது. இதுகுறித்த நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அபிநயாவின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய வினோத், அபிநயா ஆகிய இரண்டு பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்துள்ளனர். வினோத்திற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் அபிநயாவை 2வது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வினோத் கடந்த 1ம் தேதி காடம்பாடியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அது முதல் அபிநயா மன உளைச்சலில் இருந்தார். வினோத் இறந்த பின்னர் மருத்துவ விடுப்பில் சென்ற அபிநயா கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் பணிக்கு வந்தார். அதுமுதல் மாவட்ட கருவூலகத்தில் இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்த அவர், காதல் தோல்வியால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உயர் அதிகாரிகளின் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post நாகை கருவூலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: கள்ளக்காதலன் இறந்ததால் விபரீத முடிவு? appeared first on Dinakaran.

Related Stories: