கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் தமிழ்நாட்டில் 30ம் தேதி வரை மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 30ம் தேதி வரையில் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவகாற்றின் காரணமாக கேரளாவில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. அதற்கேற்ப நேற்று நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 220 மழை பெய்துள்ளது. வால்பாறயைில் 150 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர தாழ்வுப்பகுதியாக மாறி படிப்படியாக செயலிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 28ம் தேதி வரை நீடிக்கும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும், கேரளாவிலும் மிககனமழை, அதீத மழை பெய்யும். வால்பாறையில் 200மிமீ வரையும், அவலாஞ்சியில் 350 மிமீ வரை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் 5 மிமீ முதல் 10 மி மீ வரை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே வங்கக்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றுசுழற்சி நேற்று முன்தினம் வடக்குப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். பின்னர் 30ம் தேதி மண்டலமாக மாறும். புயலாக மாற வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலைதான் பருவமழையாக மாற்றும். பொதுவாக புயலுக்கு பதிலாக தாழ்வுப்பகுதிகள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் போன்றவை உருவானால்தான் மழை தொடர்ந்து நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மகாராஷ்ட்ரா, கோவாவில் நிறைய மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின் சாரலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பழனி வரையும் கோவை வரை எட்டும்.

மாலையில் அது அதிகரிக்கும். நடு இரவில் தூறல் மழை பெய்யும். இது 31ம் தேதி வரை நீடிக்கும். கேரளாவில் பருவமழை அதிகரிக்கும் போது இங்கும் தூறல் மழையாக இருக்கும். இது தென் மாவட்டங்களில் அதிகரிக்கும். சென்னை திருவள்ளூர், காஞ்சியில் 28ம் தேதிக்கு பிறகு மிதமான மழையாக பெய்யும். திருப்பத்தூர். திருவண்ணாமலை, கடலோரம் வரை வெப்பச்சலன மழையும் பெய்யும். தென்மேற்கு பருவமழையின் போது வரும் சிறிய மேகம் கூட நல்ல மழையை கொடுக்கும். இதன் காரணமாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

டெல்டாவிலும் அவ்வப்போது மழை பெய்யும். இந்த மாத இறுதி நாட்களில் இப்படி இருக்கும். மழையை பொருத்தவரையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெப்ப சலனம் அதிகரித்து மாலை இரவில் நல்ல மழை பெய்யும். இரண்டாவது வாரத்தில் தென் மேற்கு பருவமழை வலுப்பெறும் போது தமிழகத்திலும் மழை பெய்யும் என்று வானிலை அமைப்பு குறித்து ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் வானிலை அமைப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, நீலகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 2 செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ்வரையில் வெப்பநிலை குறைந்துள்ளது. கோவை, கடலூர், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய கிழக்கு அரபிக் கடல்மற்றும் அதை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் நண்பகலில் தெற்கு கொங்கன் கடற்கரையை கடந்து சென்றது. நேற்று காலையி் தெற்கு மத்திய மகராஷ்ட்ரா மற்றும் அதை ஒட்டிய மரத்வாடா மற்றும் வடக்கு உள் கர்நாடகாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்தும், வங்கக் கடல் பகுதியில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. அதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி அவலாஞ்சியில் 220 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறையில் 150 மிமீ மழை பெய்துள்ளது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. 27 மற்றும் 28ம் தேதிகளிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

The post கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் தமிழ்நாட்டில் 30ம் தேதி வரை மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: