கடந்த 20ம் தேதி மாடு மேய்க்க சென்ற சரஸ்வதி வனத்தை ஒட்டிய தோட்டப்பகுதியில் காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், அவரை கொலை செய்துவிட்டு, தங்க தோடு, மூக்குத்தியை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொலையாளியை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், அப்பகுதியில் மெயின்ரோட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான நபர் பற்றி தீவிரமாக விசாரித்தனர்.
இதில் அவர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், கள்ளக்குறிச்சி பகுதியில் அடுத்தடுத்து தனியாக இருக்கும் மூதாட்டிகளை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடியான ஓமலூர் பொட்டியபுரம் கட்டிக்காரனூரை சேர்ந்த நரேஷ்குமார் (26) என தெரியவந்தது. அவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் பதுங்கியிருப்பதாக தகவலறிந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ விஜயராகவன், போலீஸ்காரர்கள் செல்வகுமார், அரசு, வேல்முருகன், குழந்தைவேல் ஆகியோர், அங்கு சென்று சுற்றி வளைத்தனர்.
அப்போது எஸ்ஐ விஜயராகவன், போலீஸ்காரர் செல்வகுமார் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு நரேஷ்குமார் தப்பியோட முயன்றார். இதனால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரது வலது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்தவரை போலீசார் பிடித்து, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தப்பிச்செல்ல வைத்திருந்த டூவீலரை பறிமுதல் செய்தனர். ரவுடி வெட்டியதில் காயமடைந்த எஸ்ஐ விஜயராகவன், போலீஸ்காரர் செல்வகுமாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி (பொ) ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரடி விசாரணை நடத்தி, காயமடைந்த எஸ்ஐ உள்ளிட்ட இருவரையும் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
* கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள் நிலுவை
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி நரேஷ்குமார் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 17.9.2020ல் சேலம் மாவட்டம் மல்லூரில் ஆராங்கல்திட்டை சேர்ந்த மூதாட்டி லட்சுமியை (65) பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, தோடு, தாலி மற்றும் ரூ.800 பணம், செல்போன் ஆகியவற்றை நரேஷ்குமார் கொள்ளையடித்துவிட்டு, சடலத்தை புதருக்குள் தள்ளிவிட்டுவிட்டு சென்றிருந்தார். அந்த வழக்கில் கைதானவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து தப்பியோடிய வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மூதாட்டியை கொன்ற வழக்கில் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
* 20 நாட்களில் 5 மூதாட்டிகளை கொடூரமாக தாக்கி கைவரிசை
சங்ககிரியில் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் நரேஷ்குமார், கடந்த 20 நாளில் 5 இடங்களில் மூதாட்டிகளை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளார். கடந்த 3ம் தேதி சங்ககிரியில் வாழக்குட்டையை சேர்ந்த மூதாட்டி பெருமாயி (60) என்பவரை கடுமையாக தாக்கி தங்க தோடு, மூக்குத்தியை பறித்து சென்றுள்ளார். அதேநாளில் மகுடஞ்சாவடியில் மொட்டாண்டிபாளையம் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராசம்மாள் (75) என்பவரை கடுமையாக தாக்கி தங்க மோதிரத்தை பறித்து சென்றுள்ளார். கடந்த 10ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் எடக்கல் என்னும் இடத்தில் ஒரு மூதாட்டியை கடுமையாக தாக்கி தோடு, மூக்குத்தியை பறித்துள்ளார். கடந்த 19ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாப்பம்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாக்கியம் (90) என்பவரை கொடூரமாக தாக்கி ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளார்.
The post சங்ககிரி அருகே பரபரப்பு மூதாட்டியை கொன்று நகை பறித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீஸ்: எஸ்ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி appeared first on Dinakaran.