பள்ளிபாளையம், மே 25: மோட்டார் வாகன அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், அளவுக்கு மீறி பாரமேற்றிச்சென்ற இரண்டு வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரே நாளில் ரூ.1.22 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் காகித ஆலை காலனி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், இரண்டு லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக கட்டை பாரமேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்தினை ஏற்படுத்தும் வகையில், ஓவர்லோடு ஏற்றி வந்த இரண்டு லாரி டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழியாக வந்த 11 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. செல்போனில் பேசியபடியே வாகனங்களை ஓட்டிவந்த 6 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் பல்வேறு குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
The post விதிமுறை மீறி அதிக பாரமேற்றி சென்ற 2 வாகனங்களுக்கு ரூ.1.22 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.