டாஸ்மாக்கில் ஈ.டி சோதனை உச்சநீதிமன்றத்தின் தடையை வரவேற்கிறோம்: திருமாவளவன் பேட்டி

சிதம்பரம்: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம் என்று திருமாவளவன் கூறினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வி.சி. கட்சியின் தலைவருமான திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நிதி ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு இந்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியும் தராமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் நேரடியாக பங்கேற்று தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்த செல்கிறார். அதில் எந்தவொரு அரசியலும் இல்லை என்று நான் நம்புகிறேன். அமலாக்கத்துறை விதிகளை மீறி செயல்படுகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, டாஸ்மாக் நிறுவனத்தின் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம். புலனாய்வு துறை, அமைப்புகளை ஒன்றிய பாஜ அரசு தனது அரசியல் பகைவர்களுக்கு எதிராக ஏவி வருகிறது. திமுக தலைமையிலான அரசுக்கு பல நெருக்கடிகளை அமலாக்கத்துறை மூலமாக தந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் மீதான சோதனை.

துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரையில் அப்படி நடைபெற்றதாக சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை. உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக மசோதாக்களை ஏற்று சட்டமாக்கி உள்ளது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் வேந்தர் என்கிற முறையில் முதலமைச்சருக்கு உறுதியாகி உள்ளது. இதற்கு தடை விதிப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்கு என்ன முகாந்திரம் உள்ளது என்று தெரியவில்லை. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதனையும் தமிழக அரசு சட்டபூர்வமாக சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post டாஸ்மாக்கில் ஈ.டி சோதனை உச்சநீதிமன்றத்தின் தடையை வரவேற்கிறோம்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: