குன்னம், மே. 22: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அசூர் கிராமத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட அசூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அசூர் ஊராட்சியில் உள்ள குழந்தைகள் நல மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், குழந்தைகளின் வருகை விபரம், அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்து, மாதந்தோறும் அவர்களின் எடை, உயரம் கணக்கிட்டு பதிவு செய்து அதற்கு ஏற்ற போல் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிட குழந்தைகள் நல மைய அமைப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அசூர் நியாயவிலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொருட்களின் தரம், எடை இயந்திரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பொருட்கள் அனைத்தும், தரமாக உள்ளதா, முறையாக வழங்கப்படுகின்றதா என்று பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அசூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டங்களின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்ற நிலை குறித்து பயனாளிகளின் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். வீடு கட்டும் பணிக்கு ஏற்ப செலவின தொகை வழங்கிடவும், பணிகளை விரைந்து முடித்திடவும், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கும் பயனாளிகளில் தகுதியான பயனாளிகளை கண்டறிந்து வீடுகள் வழங்கிடவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
அசூர் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், கூடுதலான குடிநீர் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்பகுதியினை முழுமையாக ஆய்வு செய்து கூடுதல் குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் அசூர் கிராமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் கள ஆய்வு appeared first on Dinakaran.