வேளச்சேரி: சென்னை பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எட்டடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதனை ஒட்டி நூக்கம்பாளையம் மெயின் சாலை செல்கிறது. இந்த சாலையில் சூப் கடை, டீக்கடை என பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் டீ, சூப், குடிக்கவும், தின் பண்டங்கள் வாங்குவதற்காகவும் கடைகள் முன்பு நின்றிருந்தனர். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் அங்கு நின்ற ஆட்டோ மீதும் மோதியது.
இதில் ஆட்டோவில் அமர்ந்து இருந்தவர்கள் மற்றும் சாலையில் நின்ற சந்தியா (28), அருண்குமார் (24), சண்முகபிரியா (12), தனம் (32), சவுசியா, நிஷா உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டோவும் சேதம் அடைந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பெரும்பாக்கம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் காரை ஓட்டிய வாலிபரை பிடித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர் செம்மஞ்சேரியை சேர்ந்த பாலா (36) என்பதும், குடிபோதையில் காரை ஓட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். போதை டிரைவர் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
The post காரை தாறுமாறாக ஓட்டியதால் விபத்து; சாலையோரம் நின்ற சிறுமி உள்பட 6 பேர் படுகாயம்: போதை டிரைவர் கைது appeared first on Dinakaran.