கடந்த 19ம் தேதி நடந்த வன்னியர் சங்க கூட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்றனர். இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் அன்புமணி புறக்கணித்தார். நேற்று சமூக நீதி பேரவை வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 200 முக்கிய நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வழக்கம்போல் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டனர்.
சமூக நீதி பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு, செயலாளர் திண்டிவனம் பாலாஜி மற்றும் 3 மண்டல செயலாளர்களான பென்னாகரம் மகாலிங்கம், விருதாச்சலம் வெங்கடேசன், கோயமுத்தூர் பழனிச்சாமி, அமைப்புச் செயலாளர் கடலூர் தமிழரசன் ஆகிய 6 மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரவை மாவட்ட, நகர நிர்வாகிகள் என சுமார் 3000 பேர் உள்ள நிலையில், 200 முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டதால் நேற்றைய கூட்டத்தில் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்காமல் புறக்கணித்தார். ஏற்கனவே நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்ளாத நிலையில், பாமக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பாலு நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றதால், அன்புமணியும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் பாமக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
* அன்புமணியை நான் நீக்குவேனா? ராமதாஸ் திடீர் பல்டி
சமூக நீதி பேரவை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ராமதாஸ் பேசுகையில், ‘நான் கட்சியிலிருந்து அன்புமணியை நீக்குவேனா, அப்படி நீக்கினால் இந்த நாடு, இந்த உலகம் தாங்குமா? ஆனால் சிலர் நான் அன்புமணியை கட்சியை விட்டு நீக்கப் போகிறேன். அதனால் எனது தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற வேண்டாம் என கூறி வருகின்ரனர். நான் அதுபோல் செய்ய மாட்டேன்’ என்றார். பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்ததால், மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து மைக்கை தூக்கி வீசிவிட்டு, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து பாமகவினர் சந்திக்கலாம் என கூறிவிட்டு சென்றார். இதையடுத்து அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக ராமதாஸ் நியமித்தார். இதனால் ஏற்பட்ட மோதலில், ராமதாஸ் கூட்டிய அனைத்து கூட்டங்களையும் அன்புமணி புறக்கணித்தார். நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்காக சித்திரை முழு நிலவு மாநாட்டில் மட்டும் அன்புமணி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூறுகையில், ‘தைலாபுரம் கூட்டத்திற்கு அன்புமணி வருவார், புறக்கணிக்கவில்லை, கலந்து கொள்வார். வருகிற ஞாயிற்றுக்கிழமை சமூக முன்னேற்ற சங்கம் கூட்டம் நடைபெறும். பாஜ ஆட்சியில் இருக்கிறார்கள், அவர்கள் வேகமாகதான் இருப்பார்கள். பாமகவின் நடைமெதுவாக இருக்கும், ஆனால் வேகமாக இருக்கும். பாஜ கூட்டணியில்தான் தொடருகிறோம். இனிமேல் தான் உறுதிபடுத்துவோம்’ என்றார்.
சமூக நீதி பேரவை மாநில தலைவரான வழக்கறிஞர் பாலு கூறும்போது, ‘பாமகவில் சமூக நீதி பேரவை கூட்டம் தைலாபுரத்தில் நடைபெற்றது. இது வழக்கமாக நடைபெறும் கூட்டம். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை. 10.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து போராட்டம், பாமகவால் நடைபெற உள்ளதால் அதுகுறித்து விவாதித்தோம்’ என்றார்.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர் சமுதாயத்தில் கையெழுத்து போட தெரியாமல் இருந்த நிலையை மாற்றி 5 ஆயிரம் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் உருவாக்கி உள்ளோம். இவர்கள் இடஒதுக்கீட்டில் படித்தவர்கள். நிறைய நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தில் இருந்து மேலமை நீதிமன்றம் வரைக்கும் உருவாகி உள்ளார்கள். என்னுடைய உழைப்பால் என்னுடைய போராட்டத்தால் அனைவரும் பயன்பெற்றுள்ளனர். சமூக நீதி என்றால் அதை இந்திய அளவில் பேசுவதற்கு என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. நான் ஒருவன் தான் அதைப்பற்றி பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது. அவர்களுக்கு தெரியாது, மிக மிக பிற்படுத்தப்பட்ட இந்த சமுதாயம் படித்துக் கொண்டிருக்கிறது. நீதித்துறையில் இடஒதுக்கீடு வேண்டும், நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை, உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அன்புமணி உங்களை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், ‘வருவார்… வந்து சந்திப்பார்…’ என தெரிவித்தார். இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு நீங்காதா? என்று நிருபர்கள் கேட்டபோது, நான் எப்போதும் கசப்பை கூறியது இல்லை, சொல்வதில்லை. நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன். மருத்துவராக இருந்தாலும் இனிப்பான மருந்துதான் கொடுப்பேன். கசப்பான மருந்து கொடுக்க மாட்டேன் என்று ராமதாஸ் தெரிவித்தார். தொடர்ந்து, நீச்சல் மற்றும் உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருவது குறித்து கேட்ட கேள்விக்கு, ‘திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணிய ஐயர், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை என்று என்னிடம் சொன்னார். ஆனால் நான் சொன்னேன், என்னென்ன தப்புதப்பா சொல்கிறீர்கள், சிங்கத்தின் கால்கள் பழுதடையவில்லை சீற்றமும் குறையவில்லை. மாறாக சீற்றம் அதிகமாகதான் ஆகிறது, கால்கள் பழுதுபடவும் இல்லை. அதனால்தான் நீச்சல் அடித்தேன்’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலுக்கு பாமக அமைப்புகளை வலுப்படுத்த கூட்டங்களை ராமதாஸ் நடத்தி வருகிறார். பாமகவில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த நெருக்கடி நிலை, சலசலப்பு அத்தனையும் மாறிவிட்டது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் நேரில் சந்திக்க உள்ளனர். அதன்பிறகு எங்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள். தேர்தலுக்கு தயாராக போகிறோம். இப்போது கூட்டணி குறித்து பேசவில்லை. தற்போது ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.
பாமக பொருளாளர் திலகபாமா, மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் கூட்டங்களுக்கு வராதது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘விரைவில் அவர்களும் வருவார்கள்’ என ஜி.கே.மணி தெரிவித்தார். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன் தற்போதைய நிலை என்ன? என நிருபர்கள் கேட்டதற்கு, ‘விரைவில் அனைத்திற்கும் அவர்களே பதில் அளிப்பார்கள். ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த இயக்கம் பாமக. இந்த இயக்கம் எப்போதும் நலிந்து போகாது, நிலை குலையாது, மேலும் வளமாக இருக்கும், பாதிக்காது. இருவரின் சந்திப்புக்குபின் ஒவ்வொரு தொண்டரும் வெறித்தனமாக செயல்படுவார்கள்’ என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
The post தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.