கோவை, மே 21: கோவை காந்திபுரம் ஜி.பி.சிக்னல் அருகே கடந்த 13ம் தேதி வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காட்டூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவரது தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் மதுரையை சேர்ந்த தினேஷ் (35) என்பதும், கோவை காந்திபுரம் பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், தினேசுக்கு திருமணமாகவில்லை. சம்பவத்தன்று இவர் உட்பட 3 பேர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கல்லை தூக்கிப்போட்டு தினேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘கட்டிட கொலை தொடர்பாக சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், கொலையாளி குறித்து முக்கிய அடையாளம் கிடைத்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.’’ என்றனர். இதற்கிடையே கொலையாளி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சேலத்தில் முகாமிட்டு கொலையாளியை தேடி வருகின்றனர்.
The post கோவையில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 20 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.