கோவை, ஜூன் 12: கோவை வாலாங்குளம் அருகே சுங்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் நேற்று வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பன போன்ற விவரம் தெரிய வரவில்லை.
அவர் மேம்பாலத்திற்கும், கீழுள்ள ரயில் தண்டவாளத்துக்கும் இடைபட்ட கான்கிரீட் தூணில் கழுத்தில் கேபிள் ஒயரால் சுருக்கிட்டு படுத்தநிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து சுமார் ஒரு மணி நேரம் கழித்தே ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் நேற்று மாலை பள்ளி முடிந்து, வேலை முடிந்து சுங்கம் மேம்பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி அடைந்தனர்.
The post சுங்கம் ரயில்வே பாலத்தில் வாலிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.