* நகை, பணத்துக்காக மெகா மோசடி
* போலீசார் விரித்த வலையில் சிக்கினார்
ஜெய்ப்பூர்: உபி, ராஜஸ்தான், மபி மாநிலங்களில் 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த கில்லாடி ெபண்ணை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்ப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவருக்கும், மபி மாநிலம் போபாலில் வசிக்கும் அனுராதா பஸ்வானுக்கும் கடந்த ஏப்.20ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணம் இந்து சடங்குகளின்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. தரகர் பப்பு மீனா மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக விஷ்ணு அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார். திருமணம் நடந்த இரண்டு வாரங்களுக்குள், அனுராதா பாஸ்வான் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.30,000 ரொக்கம், ரூ.30,000 மதிப்புள்ள மொபைல் போனுடன் மாயமாகி விட்டார்.
இதுபற்றி மே 3ஆம் தேதி விஷ்ணு சர்மா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதில் அனுராதா பஸ்வான் மற்றும் திருமண ஏஜெண்ட்கள் சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டினார். இந்த புகாரின்பேரில் விசாரணையை மேற்கொண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனெனில் விஷ்ணு சர்மாவைப்போல 3 மாநிலங்களில், பலரை அனுராதா ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. சுமார் 25 பேரை ஏழு மாதங்களில் மணந்து நகை, பணத்துடன் அவர் தப்பி ஓடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும், மோசடி கும்பலையும் கையும், களவுமாக பிடிக்க ராஜஸ்தான் போலீசார் அதிரடி திட்டம் தீட்டி, போலீஸ் கான்ஸ்டபிளை பெண் தேடும் மணமகனாக நடிக்க வைத்தனர். வாட்ஸ்அப் குழு மூலம் அவரது விருப்பம் அனுராதா கும்பலுக்கு சென்றது. அவர்கள் வழக்கமான திட்டப்படி வெளியே வந்த போது மத்தியபிரதேச மாநிலம் போபாலில் வைத்து அனுராதாவை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் அனுராதா பஸ்வான். குடும்ப பிரச்னை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து மபி மாநிலம் போபாலில் குடியேறினார். அங்கு திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திருமண மோசடி திட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அவள் தனியாக இருக்கிறாள். அவள் ஏழை. அவள் உதவியற்றவள். அவளுக்கு ஒரு வேலையில்லாத சகோதரர் இருக்கிறாள். அவள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள், ஆனால் நிதி நெருக்கடிகள் அவள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதைத் தடுக்கின்றன என்பது போன்ற திருமண தகவல்களை அனுராதா படத்துடன் இந்த கும்பல்கள் வாட்ஸ்அப் மூலம் பரப்புவார்கள்.
அனுராதாவின் அழகில் மயங்கி வரும் மணமகனிடம் முதலில் திருமண பொருத்த பேரத்திற்காக ரூ. 2 லட்சம் வசூலிப்பார்கள். பின்னர் திருமண ஒப்புதல் கடிதம் தயாரிக்கப்பட்டு கோயில் அல்லது வீட்டில் எளிய முறையில் திருமணம் நடக்கிறது. புதிய மனைவியாக அனுராதா, மணமகன் மற்றும் அவரது மாமியார் ஆகியோருடன் அழகாகவும் அப்பாவியாகவும் நடந்து கொள்வார். அவர்களின் நம்பிக்கையைப் பெற, அவர் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருடனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவார். ஓரிரு நாட்களில் அவர்கள் சாப்பிடும் உணவில் மயக்க மருந்தை கலந்து விட்டு, நகைகள், பணம் மற்றும் வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விடுவார். இதே போல் உபி, ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் 25 ஆண்களை மோசடியாக மணந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
The post உபி, ராஜஸ்தான், மபியில் 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த பெண் appeared first on Dinakaran.