கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் உலக சாதனை

கோவை, மே 17: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் ஓசோன் யோகா பயிற்சி மையத்தின் நிறுவனராகவும் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இவர் கிணற்று நீரில் தொடர்ந்து பல மணி நேரம் மிதந்தும், ஒரு டன் எடை கொண்ட மாருதி வேனை 32 வினாடிகள் தொடர்ந்து தன் நெஞ்சில் நிறுத்தி வைத்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாளி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 30 பேர் பங்கேற்று இருந்தனர். அதில், கோவை மாவட்டத்தில் இருந்து யோகா பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் ஓம் சான்டிங் என்ற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் யார் ஒருவர் தன், அதிக சத்தத்துடன் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் ஒரே அளவிலான சத்தத்துடன் ஓம் என்ற வார்த்தையை அதிக நேரம் உச்சரிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடினமான இந்த போட்டியில் யோகா பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று, ஓம் என்ற வார்த்தையை அதிக சத்தத்துடன் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் ஒரே அளவில் தொடர்ந்து 45 வினாடிகள் உச்சரித்து புதிய உலக சாதனையை படைத்தார். இவருக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இருந்து புதிய உலக சாதனை நிகழ்த்திய கோவை பயிற்சியாளர் பாலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

The post கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் உலக சாதனை appeared first on Dinakaran.

Related Stories: