தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்ததாக கூறிய விவகாரம்: கேரள முன்னாள் அமைச்சர் சுதாகரன் மீது வழக்கு


திருவனந்தபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் தபால் ஓட்டுகளை பிரித்து முறைகேடு செய்ததாக கூறிய விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் அமைச்சர் ஜி. சுதாகரன் மீது ஆலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் மந்திரிசபையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஜி. சுதாகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஆலப்புழாவில் நடந்த என்ஜிஓ சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 1989ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் தபால் ஓட்டுகளை பிரித்து முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக தன் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்றும் கூறினார்.

சுதாகரனின் இந்தப் பேச்சு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை அந்தத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தேவதாஸ் மறுத்தார். சுதாகரனின் பேச்சு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும், அந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையே சுதாகரனின் இந்தப் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆலப்புழா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆலப்புழா மாவட்ட கலெக்டரும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சுதாகரன் மீது ஆலப்புழா தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 465, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தான் அவ்வாறு பேசவில்லை என்று சுதாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தலில் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும், சற்று அதிக கற்பனை செய்து கூறியதை ஊடகங்கள் திரித்து எழுதிவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

The post தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்ததாக கூறிய விவகாரம்: கேரள முன்னாள் அமைச்சர் சுதாகரன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: