திருப்பூர்,மே.16: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வினை 108 தேர்வு மையங்களில் 348 பள்ளிகளில் பயிலும் 30 ஆயிரத்து 235 மாணவ மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 1097 மாணவர்கள் என 31,332 பேர் எழுதி உள்ளனர். நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
தேர்வு முடிவடைந்த பிறகு, திருப்பூரில் காதர் பேட்டை அருகே உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரம் தேன் மலர் மெட்ரிக் பள்ளி ஆகிய இரு இடங்களில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெற்று நிறைவு பெற்றது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு 2019ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 2020 மற்றும் 21ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாத நிலையில் 2022 ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் 29வது இடமும் 2023ல் 11வது இடமும் பெற்றது. சரிவிலிருந்து மீண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் 21வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. தேர்ச்சி சதவீதமும் குறைந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியாகியுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்தது மட்டுமல்லாது தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டை விட அதிகரித்திருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சருக்கலை தவிர்த்து சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேபோல் 11ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெற்று நிறைவு பெற்றது.இந்த தேர்வினை திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவிகள், தனித் தேர்வர்கள் 328 பேர் என 27 ஆயிரத்து 565 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. 2023ம் ஆண்டு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடமும் 2024ம் ஆண்டு மூன்றாம் இடமும் பெற்ற நிலையில் அதே சாதனையை இந்தாண்டு அதிக தேர்ச்சி சதவிகிதத்துடன் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post பத்து மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது appeared first on Dinakaran.