கலைஞர் பிறந்த நாள் விழா: உலக சுற்றுச்சூழல் தினம் மாணவர்கள் விழிப்புணர்வு

திருப்பூர், ஜூன்6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு 2 மாணவர்கள் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதவி பொறியாளர் திப்பு சுல்தான் பேசுகையில்: நாம் சுற்றுச்சூழலை பேணி பாதுகாத்தால் தான் சுற்றுசூழல் நம்மை பாதுகாக்கும். உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டினை முற்றிலுமாக அழிப்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும்.சுற்றுசூழலின் முக்கிய காரணிகளான நிலம்,நீர்,காற்று ஆகியவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது நமது கடமையாகும். தொழிற்சாலைகளில் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும்.

மேலும் வாகனங்களில் புகை வடிப்பான்கள், பசுமை எரிபொருள்களை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டினை தவிர்க்க முடியும். அதிகளவில் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் உயிரினங்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து , மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடனம் மற்றும் பொம்மலாட்டம் மூலமாகவும், மௌன நாடகம் மூலமாகவும் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பிறகு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரம் கொடுத்தும், மஞ்சப்பை வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்த நாள் விழா: உலக சுற்றுச்சூழல் தினம் மாணவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: