தாம்பரம், மே 16: தாம்பரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, சானடோரியம் பகுதியில் ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்திற்கான கட்டுமானப் பணியின் தற்போதைய நிலை குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து, 4வது மண்டலம், 60வது வார்டு, கல்யாண் நகர், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி, 52வது வார்டு, முல்லை நகர் பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர், 59வது வார்டு, பீர்க்கன்காரணை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி, 56வது வார்டு, பெருங்களத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி மற்றும் 58வது வார்டு, அறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும், என்று ஆணையர் பாலச்சந்தர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post தாம்பரம் மாநகராட்சியில் ரூ.46 கோடியில் திட்ட பணிகள் : ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.