கரூர்: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூஞ்சோலைப்புதூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி சேங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது, அந்த பள்ளியில் பணிபுரிந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி (42), பள்ளி தாளாளர் யுவராஜ்(41) ஆகியோர் பாலியல் தொல்லை தந்ததாக கடந்த 2022ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நிலவொளி, யுவராஜ் ஆகியோரை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கவேல் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் நிலவொளி, தாளாளர் யுவராஜ் ஆகியோருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
The post 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை: கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.