காஞ்சிபுரம் மே 15: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், இந்தியாவிலேயே முதல்முறையாக செல்போன் மற்றும் உடமைகள் வைக்க தானியங்கி முறையில் இயங்கும் லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம், பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது, என்று கூறி கோயிலுக்குள் செல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும், என்று சில பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள், அர்ச்சகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பும்படி அறநிலையத்துறை கமிஷனருக்கு, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாசல்களில் 300 செல்போன் வைக்கும் வகையில், தானியங்கிய லாக்கர் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக சென்று செல்போன் எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவு செய்து தங்களது செல்போன் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்லலாம். இந்நிலையில், தானியங்கி லாக்கர் சேவையை சங்கர மட மேலாளர் சுந்தரேசன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். செல்போன் லாக்கர் ரூ.10 மற்றும் உடமைகள் லாக்கர் ரூ.10 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்வதற்கு தானியங்கி லாக்கர்களை திறக்கப்பட்டதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
The post காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் செல்போன்கள், உடமைகள் வைக்க தானியங்கி லாக்கர்கள் அமைப்பு appeared first on Dinakaran.