வந்தவாசி, மே 14: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யா(19). தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த பிரதாப்(25) சென்னையில் தனியார் லாரி கம்பெனி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது. தம்பதிக்கு குழந்தை இல்லை. சென்னையில் தங்கி வேலை செய்து வரும் பிரதாப் 15 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வருவதால் கடந்த 10 நாட்களாக திவ்யா அவரது தாய் வீடான விளங்காடு கிராமத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனியாக இருந்த திவ்யா திடீரென வீட்டின் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாக திவ்யாவின் நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது திவ்யா தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. வனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சடலமாக தொங்கிய திவ்யாவை மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் பிரேத பரிசோதனையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டி வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சடலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மனைவி தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கணவர் பிரதாப் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் திவ்யா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததால் வரதட்சனை காரணமா என சந்தேகத்தின் பேரில் செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா விசாரணை நடத்தி வருகிறார்.
The post புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை விஷம் குடித்தார் கணவர் வந்தவாசி அருகே appeared first on Dinakaran.