கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*தோசை மாவுடன் ஜவ்வரிசி போட்டு அரைத்தால் பளபளவென வரும்.

*அவலை வேகவைத்து அதில் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்து, தயிர் கலந்து சாப்பிடலாம்.

*தோசை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்தால் சுவை, மணமாக இருக்கும்.

– எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

*ரவை, மைதா, சர்க்கரை மூன்றையும் சமமான அளவில் எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவும். குழிக் கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு
எடுத்தால் வித்தியாசமான ரவை பணியாரம் ரெடி.

*கலங்கலா இருக்கும் சுட்ட எண்ணெயில் உருளைக்கிழங்கை நான்கைந்து வில்லைகளாக நறுக்கிப் போட்டு எடுத்தால் எண்ணெய் தூய்மையாகிவிடும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

*ஆரஞ்சுப் பழத்தோலை பொடியாக்கி ரசத்துடன் சேர்த்தால் சுவை கூடும்.

*பூண்டு மற்றும் மீன் வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி கழுவி விடுங்கள். வாடை இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

– ஹெச். ராஜேஸ்வரி, பூந்தமல்லி.

*பிடி கருணையை வேகவைக்கும் போது கொஞ்சம் கொய்யா இலைகளையும் சேர்த்து வேகவைத்தால் காரல் இருக்காது.

*தோசை சுடும் போது ஒட்டினால் கொஞ்சம் உப்புத் தண்ணீர் கலந்து தெளித்து விட்டு தோசை ஊற்றினால் தோசை ஒட்டாமல் வரும்.

*பனீர், சீஸ் மீதமானால் அதனை ஒரு ஏர்டைட் கன்டெய்னரில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு சேர்த்து ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

– எஸ்.ராஜகுமாரி, சென்னை.

*தயிரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுதுகள், ஆம்சூர், உப்பு, நறுக்கிய காளான்கள் இவைகளை கலந்து முப்பது நிமிடங்கள் ஊறவைத்து பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கினால் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

*கோதுமை மாவுடன் பீட்ரூட், கேரட் துருவல், கீரை மெலிதாக நறுக்கி மூன்றையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக தட்டி வேக வைத்து சாப்பிட்டால் சத்தானதாக இருக்கும்.

*பாசிப்பயறு, பட்டாணி, காராமணி, சோயா பீன்ஸ் தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி பின் வேகவைத்து எடுத்து வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சைமிளகாய் இவைகளை கரம் மசாலா சேர்த்து வதக்கி வெந்த பயறு வகைகளுடன் சேர்த்துக் கிளறி இறக்கி பின்பு எலுமிச்சைசாறு பிழிந்தால் முளை கட்டிய பயறுகள் தால் ரெடி.

– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

*துவையல் மற்றும் குழம்பு செய்யும் போது சின்ன வெங்காயம் சேர்ப்பது நல்லது.

*புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை கிள்ளி விட்டு தண்டினை தூர எறியாமல், கழுவி, சுத்தம் செய்து சூப் வகைகள், க்ரீன் டீ மற்றும் கஷாயம் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

*பஜ்ஜி, சுகியம் செய்யும் போது ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் உப்பலாகவும், மொறுப்பாகவும் இருக்கும்.

– ஆர்.தஸ்மியா, கிருஷ்ணகிரி.

*மோர் மிளகாய் போடும்போது, பச்சைமிளகாயை மோரில் ஊறவைப்பதற்கு முன்பு, வெந்தயத்தையும், உப்பையும் அரைத்து, மோரில் கலந்து அதில் மிளகாயைப் போட்டு பின்பு காயவைத்தால் ருசியாக இருக்கும்.

*சர்க்கரை பொங்கல் செய்யும் போது, பொங்கல் செய்து இறக்கியவுடன் ஒரு கப் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கிளறி, பின்பு பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.

*கொழுக்கட்டைகளை வேகவைக்கும் வாழை இலைகளை துண்டுகளாக்கி, அதில் கொழுக்கட்டைகளை அடுக்கி வேகவைத்தால் ஒட்டிக் கொள்ளாது, எடுக்கவும் வசதியாக இருக்கும்.

– ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.

* தோசை, இட்லிக்கு கருப்பு உளுந்தை உபயோகித்து அரைக்க, இட்லி ரொம்ப சாஃப்டாக இருக்கும்.

* இட்லி மிளகாய் பொடி செய்வதற்கு கருப்பு உளுத்தம் பருப்பை கடலைப் பருப்புடன் சேர்த்து அரைக்க இட்லி பொடி டேஸ்டியாக இருக்கும்.

* பாசிப்பயறை ஊறவைத்து முளைவிட்ட பிறகு எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து கூட்டு, சாலட், சுண்டல் செய்ய உபயோகிக்கவும்.

* முருங்கை, கறிவேப்பிலை இலைகளை காயவைத்து இட்லி பொடி செய்யும் போது கலந்து அரைக்கலாம்.

– தாரா மணிவண்ணன், கோவை.

சர்க்கரைவள்ளி பாயசம்

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கு – ¼ கிலோ,
பொடித்த வெல்லம் – 1¼ கப்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
ஏலக்காய் தூள், சுக்கு தூள் – தலா ¼ டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரி – தேவையான அளவு.

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் பொடித்த வெல்லம், நெய் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கிளறிக் கொண்டே கொதிக்க விடவும். கடைசியில் தேங்காய்ப் பால் ேசர்த்து இறக்கவும். ஏலக்காய் தூள், சுக்கு தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

– வாசுகி, சென்னை.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: