சேலம் சூரமங்கலம், ஜாகீர்அம்மாப்பாளையம் எட்டிக்குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவரது மனைவி வித்யா (60). மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களது மூத்த மகன் ராமநாதன் தனியாக வசித்து வருகிறார். 2வது மகன் ஆனந்த் வீட்டின் மேல்மாடியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிறு) மாலை மேல்மாடியில் இருந்து ஆனந்த் கீழே இறங்கி வந்தபோது தாய், தந்தை இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். சோதனையில் வீட்டில் ரத்தம் படிந்த சுத்தியல் ஒன்று கிடந்தது. எனவே, அவர்கள் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து செல்வது தெரியவந்தது. அதன்படி தம்பதியர் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் வசித்த பீகாரை சேர்ந்த சந்தோஷ் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவருக்கு லட்சுமி என்ற மனைவி மற்றும் 11, 9 வயதில் 2 மகள்களும், 8 வயதில் மகனும் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அவரை கைது செய்து, பத்தரை பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தோஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: டைல்ஸ் ஒட்டும் தொழிலில் சந்தோசுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். பாஸ்கரனின் மளிகை கடைக்கு அடிக்கடி பொருட்கள் வாங்க செல்வார். தம்பதியர் நகை அணிந்திருப்பதை பார்த்து, கடனை அடைப்பதற்காக அவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சுத்தியலை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்து குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.
பின்னர், உள்ளே சென்று இருவரை சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார். பாஸ்கரன் அணிந்திருந்த 7 பவுன் நகையையும், வித்யா அணிந்திருந்ததில் மூன்றரை பவுன் நகையையும் பறித்துள்ளார். நகைக்காக கொலை நடந்தது என்று தெரியாமல் இருக்க ஒரு செயினை விட்டு சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைதான சந்தோசின் மாமனார் சுனில்குமார், அதிமுகவை சேர்ந்தவர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் இருந்து பிழைப்பு தேடி சேலம் வந்த அவர் அதிமுகவில் சேர்ந்துள்ளார். பின்னர் தனது மகள் லட்சுமியை சந்தோசுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். போலீஸ் விசாரணைக்கும் சுனில்குமார் அதிமுக கரை வேட்டியுடன் தான் வந்திருந்தார். கைதான சந்தோசை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே, கொலையாளிகளை பிடித்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.
The post சுத்தியலால் அடித்து தம்பதி கொடூர கொலை அதிமுக பிரமுகரின் மருமகன் அதிரடி கைது: கடன் தொல்லையால் நகையை பறிக்க கொன்றதாக வாக்குமூலம் appeared first on Dinakaran.